ஞாயிறு, 15 ஜனவரி, 2012

எழுத்தாளுமைகள்

கல்கி - வாசிப்பின் ஆரம்ப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர் கல்கி.

அந்த சின்ன வயதிலேயே பொன்னியின் செல்வன் என்னை அந்த அளவுக்கு ஆக்கிரமித்திருந்தான். அன்று நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாக நினைவு. ஈடுபாடு என்னவோ வந்தியத்தேவனிடம்தான். அன்று அந்தப் புதினத்தைப் படித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவருமே சரித்திர காலத்தில்தான் உழன்றார்கள்.
உண்மையைச் சொல்லப்போனால் நிகழ்காலமே யாருக்கும் பிடிக்கவில்லை. அப்படி ஒரு ஈர்ப்பு பொன்னியின் செல்வனில்.

பின்னர் தேடல் முழுவதும் சரித்திரக்கதைகளாகவே இருந்தன. அப்படித்தான் கல்கிக்குப் பிறகு சாண்டில்யன் நுழைந்தார். அது வேறு ஒரு உலகம். அவரின் புதினங்களில் என்னைக் கவர்ந்தது யவனராணி. கல்கியின் அனைத்துப் படைப்புகளையும் ஒர் சுற்று சுற்றி விட்டுத்தான், சாண்டில்யனிடம் வந்தேன். கொஞ்ச நாட்கள் அவருடன் சுற்றிவிட்டுத் திரும்பினால் அதோ வருகிறார் சுஜாதா.

நவீன உலகத்துக்கு அத்தனை வாசகர்களையும் சடுதியில் அழைத்துச் சென்றவர் அவர். கடைசி வரை அத்தனை பேரையும் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்.

பிறகு ஜெயகாந்தன், அரு. ராமநாதன்,நா.பார்த்தசாரதி,கிவா,லா.சா.ராமாமிருதம், இந்திரா பா.சாரதி, கோவி, அசோகமித்திரன், பாலமுருகன் இன்னும் விடுபட்ட பலபேர்களுடனும் அளவளாவிக் கொண்டிருக்கும்போது விடிவெள்ளி போல தென்பட்டார் தி. ஜானகிராமன்.

ஆற்றொழுக்கு போல மனதை தடவிவிடுவது போல ஒரு எழுத்து அவருடையது. அவரின் அம்மா வந்தாளில் விழுந்தவன்தான். இன்னமும் அவரின் எழுத்தாளுமையிலிருந்து நான் மீளவேயில்லை. மீளவும் விரும்பவில்லை. எத்தனை மீள் வாசிப்பு நடத்தியும் அதன் புதுமை குறைவதேயில்லை. அவரின் சிறுகதைகளுக்காக ஒரு தனிக்கட்டுரையே எழுதலாம்

புதுமைப்பித்தனின் எழுத்தாளுமைக்கும் ஒரு தனி வசீகரம் உண்டு.

விடுபட்ட எழுத்தாளுமைகள் நிறைய உண்டு.

முத்தாய்ப்பாக சு.ரா.     ஜே.ஜே. சில குறிப்புகள், ஒரு புளியமரத்தின் கதை,
மற்றும் அவரின் சிறுகதைகள்,கட்டுரைகள்--அனைத்தும் கல்வெட்டுக்கள்.

http://subramanian-thamirabharani.blogspot.com/
date 15/01/2012    01-35p.m

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

தாமிரபரணி

தாமிரபரணியை நான் மிகவும் நேசிக்கிறேன்
என் சொந்த ஊரான கல்லிடையை அரவணைத்துச்செல்லும் நதி அது.

பொதிகையில் உற்பத்தியாகி பாபநாசம், விகேபுரம்வழி, அம்பை-கல்லிடையூடாகப் பாய்ந்து, வீரவநல்லூர், சேரன்மாதேவி,நெல்லை கடந்து
கருங்குளம், ஸ்ரீ வைகுண்டம் தாண்டி கடலை அடைகிறது.

செல்லும் வழியெல்லாம் பசுமையை விதைத்து வளம் பெறச்செய்கிறது


கல்லிடை என் பாட்டனார், தகப்பனார் ஊர்.

கருங்குளம் என் தாயாரின் ஊர்.

தாமிரபரணியின் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்கள்

என் உடம்பில் ஓடுவது தாமிரபரணி ரத்தம்

நான் மட்டுமல்ல, தாமிரபரணி நதிக்கரையில் பிறந்து வளர்ந்த
அனைத்து மக்களும் அப்படித்தான்.

காவேரியை சொந்தம் கண்டாட ஒருவர், இப்போது பெரியாரை சொந்தம் கொண்டாட வேறொருவர். எனில்,

தமிழகத்திலேயே உற்பத்தியாகி தமிழ் மண்ணிலேயே ஓடி,
தமிழ் நாட்டு கடலில் கலக்கும் ஒரே நதி தாமிரபரணி என்பேன்.

இன்றும் எழுபதுகளை கடந்த முதியவர்கள் கூட அதிகாலை தாமிரபரணியில்
குளிப்பதைக்காணலாம்.

அவர்களின் ஆரோக்கியமே அதுதான். மூலிகையின் அம்சங்களுடன்
மருத்துவ குணம் கலந்து பாய்ந்து வரும்  நதி அது.

நதிக்கரை வாழ்வு அற்புதமானது. அங்கு  வாழ்பவர்கள் வரம் வாங்கி
வந்தவர்கள்.

நதியை நேசிப்பவன், நாட்டை, மக்களை நேசிப்பவன், மொழியை நேசிப்பவன்

நெல்லை வாழ் தமிழ் மக்களே உங்கள் தாமிரபரணியை யாரும் மாசு
படுத்த அனுமதிக்காதீர்கள்.

உங்கள் உடம்பில் உயிர் ஓடுவதே தாமிரபரணி தண்ணீரால்தான்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

http://subramanian-thamirabharani.blogspot.com/

01/01/2012   11.22pm