செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

உரிமை

உழைப்பதைப் பற்றி கவலையில்லை
வேலை நிறுத்தம் ஒன்றே எங்கள் உரிமை

நாட்டின் நலம்/யாருக்கு வேண்டும் அது
சரி உன் குடும்ப நலம்-அது பாட்டுக்கு நடக்கும்!

எப்படி?

அதை கட்சி பார்த்துக்கொள்ளும்
அது உனக்கு- மற்றவர்களின் நிலை?

அது எங்களுக்கு விஷயமில்லை-மேலும் அது
அவர்களின் கவலை.

நீங்கள் வேலை செய்ய விட்டால்தானே?
-நாங்கள் கட்சித் தலைமைக்கு கட்டுப்படுகிறோம்

இப்படியே போனால் மக்களின் அன்றாட வாழ்வு?
நாங்கள் கட்சிக்காக வாழ்கிறோம்

சரி! இதற்கு என்னதான் முடிவு?
-வேலை நிறுத்தம் வாழ்க!

http://subramanian-thamirabharani.blogspot.com/


திங்கள், 20 பிப்ரவரி, 2012

நினைவலைகள்

விடுபட்டுப்போன உறவின் உயிர்த்துடிப்பை
நேற்று உணர முடிந்தது

அத்தனை அலைஓசைகளுக்கு மத்தியிலும்
தனியாக வந்து செவிப்பறையைத்
தட்டிய குரல்

நலம் விசாரிக்கத் தோன்றவில்லை-
நலமாகத் தோன்றியதால்

சுற்றிவளைத்துப் பேசினாலும்
மையக்கருத்தென்னமோ-
நாம் மட்டுமே

சூழ்நிலைத் தாக்கத்தால் வேறுபட்டிருந்தாலும்
காலவெள்ளம் கரைசேர்த்தது

-இனி ஒன்றாகிவிடுவோம் என்ற
நம்பிக்கையின் மிச்சத்துடன்--

http://subramanian-thamirabharani.blogspot.com/
20-02-2012   11.45pm

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

எழுத்தாளுமைகள்

கல்கி - வாசிப்பின் ஆரம்ப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர் கல்கி.

அந்த சின்ன வயதிலேயே பொன்னியின் செல்வன் என்னை அந்த அளவுக்கு ஆக்கிரமித்திருந்தான். அன்று நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாக நினைவு. ஈடுபாடு என்னவோ வந்தியத்தேவனிடம்தான். அன்று அந்தப் புதினத்தைப் படித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவருமே சரித்திர காலத்தில்தான் உழன்றார்கள்.
உண்மையைச் சொல்லப்போனால் நிகழ்காலமே யாருக்கும் பிடிக்கவில்லை. அப்படி ஒரு ஈர்ப்பு பொன்னியின் செல்வனில்.

பின்னர் தேடல் முழுவதும் சரித்திரக்கதைகளாகவே இருந்தன. அப்படித்தான் கல்கிக்குப் பிறகு சாண்டில்யன் நுழைந்தார். அது வேறு ஒரு உலகம். அவரின் புதினங்களில் என்னைக் கவர்ந்தது யவனராணி. கல்கியின் அனைத்துப் படைப்புகளையும் ஒர் சுற்று சுற்றி விட்டுத்தான், சாண்டில்யனிடம் வந்தேன். கொஞ்ச நாட்கள் அவருடன் சுற்றிவிட்டுத் திரும்பினால் அதோ வருகிறார் சுஜாதா.

நவீன உலகத்துக்கு அத்தனை வாசகர்களையும் சடுதியில் அழைத்துச் சென்றவர் அவர். கடைசி வரை அத்தனை பேரையும் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்.

பிறகு ஜெயகாந்தன், அரு. ராமநாதன்,நா.பார்த்தசாரதி,கிவா,லா.சா.ராமாமிருதம், இந்திரா பா.சாரதி, கோவி, அசோகமித்திரன், பாலமுருகன் இன்னும் விடுபட்ட பலபேர்களுடனும் அளவளாவிக் கொண்டிருக்கும்போது விடிவெள்ளி போல தென்பட்டார் தி. ஜானகிராமன்.

ஆற்றொழுக்கு போல மனதை தடவிவிடுவது போல ஒரு எழுத்து அவருடையது. அவரின் அம்மா வந்தாளில் விழுந்தவன்தான். இன்னமும் அவரின் எழுத்தாளுமையிலிருந்து நான் மீளவேயில்லை. மீளவும் விரும்பவில்லை. எத்தனை மீள் வாசிப்பு நடத்தியும் அதன் புதுமை குறைவதேயில்லை. அவரின் சிறுகதைகளுக்காக ஒரு தனிக்கட்டுரையே எழுதலாம்

புதுமைப்பித்தனின் எழுத்தாளுமைக்கும் ஒரு தனி வசீகரம் உண்டு.

விடுபட்ட எழுத்தாளுமைகள் நிறைய உண்டு.

முத்தாய்ப்பாக சு.ரா.     ஜே.ஜே. சில குறிப்புகள், ஒரு புளியமரத்தின் கதை,
மற்றும் அவரின் சிறுகதைகள்,கட்டுரைகள்--அனைத்தும் கல்வெட்டுக்கள்.

http://subramanian-thamirabharani.blogspot.com/
date 15/01/2012    01-35p.m

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

தாமிரபரணி

தாமிரபரணியை நான் மிகவும் நேசிக்கிறேன்
என் சொந்த ஊரான கல்லிடையை அரவணைத்துச்செல்லும் நதி அது.

பொதிகையில் உற்பத்தியாகி பாபநாசம், விகேபுரம்வழி, அம்பை-கல்லிடையூடாகப் பாய்ந்து, வீரவநல்லூர், சேரன்மாதேவி,நெல்லை கடந்து
கருங்குளம், ஸ்ரீ வைகுண்டம் தாண்டி கடலை அடைகிறது.

செல்லும் வழியெல்லாம் பசுமையை விதைத்து வளம் பெறச்செய்கிறது


கல்லிடை என் பாட்டனார், தகப்பனார் ஊர்.

கருங்குளம் என் தாயாரின் ஊர்.

தாமிரபரணியின் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்கள்

என் உடம்பில் ஓடுவது தாமிரபரணி ரத்தம்

நான் மட்டுமல்ல, தாமிரபரணி நதிக்கரையில் பிறந்து வளர்ந்த
அனைத்து மக்களும் அப்படித்தான்.

காவேரியை சொந்தம் கண்டாட ஒருவர், இப்போது பெரியாரை சொந்தம் கொண்டாட வேறொருவர். எனில்,

தமிழகத்திலேயே உற்பத்தியாகி தமிழ் மண்ணிலேயே ஓடி,
தமிழ் நாட்டு கடலில் கலக்கும் ஒரே நதி தாமிரபரணி என்பேன்.

இன்றும் எழுபதுகளை கடந்த முதியவர்கள் கூட அதிகாலை தாமிரபரணியில்
குளிப்பதைக்காணலாம்.

அவர்களின் ஆரோக்கியமே அதுதான். மூலிகையின் அம்சங்களுடன்
மருத்துவ குணம் கலந்து பாய்ந்து வரும்  நதி அது.

நதிக்கரை வாழ்வு அற்புதமானது. அங்கு  வாழ்பவர்கள் வரம் வாங்கி
வந்தவர்கள்.

நதியை நேசிப்பவன், நாட்டை, மக்களை நேசிப்பவன், மொழியை நேசிப்பவன்

நெல்லை வாழ் தமிழ் மக்களே உங்கள் தாமிரபரணியை யாரும் மாசு
படுத்த அனுமதிக்காதீர்கள்.

உங்கள் உடம்பில் உயிர் ஓடுவதே தாமிரபரணி தண்ணீரால்தான்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

http://subramanian-thamirabharani.blogspot.com/

01/01/2012   11.22pm






வெள்ளி, 30 டிசம்பர், 2011

கல் தெய்வங்கள்

கல் தெய்வங்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

அவை அசையாச்
சொத்துக்கள்

முட்டினாலும்
மோதினாலும்
அழுதாலும்
கனியாது

திட்டினாலும்
அடித்தாலும்
இரங்காது

சுனாமி புயல்
வந்து அழிந்தாலும்
அழியாது

குற்ற உணர்ச்சியால்
மன்னிப்பு கேட்டாலும்
கிடைக்காது

தப்பித் தவறி
நன்மை நிகழ்ந்து
கண்ணீர் மல்க
நன்றி கூறினாலும்
ஏற்காது

ஊட்டினாலும்
உண்ணாது

கொடுத்தாலும்
வாங்காது

வெறுத்தாலும்
விடாது

இருந்தும்
கல் தெய்வங்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

அவை அசையாச்
சொத்துக்கள்


சனி, 17 டிசம்பர், 2011

ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை

கூடங்குளமானாலும்
முல்லைப்பெரியாரானாலும்

2 ஜி ஆனாலும்
வரப்போகும்
3 ஜி 4 ஜி 5 ஜியானாலும்

பெத்த

ஊழலேயானாலும்
தமிழ் மக்களின்
உறவே போனாலும்

எப்போதும்
ஆட்சியாளர்களுக்கு

ஒன்றுமில்லை

http://subramanian-thamirabharani.blogspot.com/

18/12/2011   1pm

வெள்ளி, 9 டிசம்பர், 2011

இணைப்பு

இணைப்பு

ஒன்றோடுன்று இணைவது சுகம்


நாடுகள் இணைவதும் பலம்
புல்லுருவிகள்
தடையிடாவிட்டால்

இணைப்பு அறிவை வளர்க்கும்
பெருமளவில்
புரிந்து கொண்டால்

நதியிணைப்பு தாகம் தீர்க்கும்
பின்
பசியைப்போக்கும்
தலை முறைகளாய்

நாடாள்பவர் இணைந்தால்
மக்கள் நலம்

மேலும் சொல்வதற்கு
ஒன்றுமில்லை

ஒன்றோடொன்று இணைவது சுகம்


09/12/2011  6.55pm