ஞாயிறு, 15 ஜனவரி, 2012

எழுத்தாளுமைகள்

கல்கி - வாசிப்பின் ஆரம்ப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர் கல்கி.

அந்த சின்ன வயதிலேயே பொன்னியின் செல்வன் என்னை அந்த அளவுக்கு ஆக்கிரமித்திருந்தான். அன்று நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாக நினைவு. ஈடுபாடு என்னவோ வந்தியத்தேவனிடம்தான். அன்று அந்தப் புதினத்தைப் படித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவருமே சரித்திர காலத்தில்தான் உழன்றார்கள்.
உண்மையைச் சொல்லப்போனால் நிகழ்காலமே யாருக்கும் பிடிக்கவில்லை. அப்படி ஒரு ஈர்ப்பு பொன்னியின் செல்வனில்.

பின்னர் தேடல் முழுவதும் சரித்திரக்கதைகளாகவே இருந்தன. அப்படித்தான் கல்கிக்குப் பிறகு சாண்டில்யன் நுழைந்தார். அது வேறு ஒரு உலகம். அவரின் புதினங்களில் என்னைக் கவர்ந்தது யவனராணி. கல்கியின் அனைத்துப் படைப்புகளையும் ஒர் சுற்று சுற்றி விட்டுத்தான், சாண்டில்யனிடம் வந்தேன். கொஞ்ச நாட்கள் அவருடன் சுற்றிவிட்டுத் திரும்பினால் அதோ வருகிறார் சுஜாதா.

நவீன உலகத்துக்கு அத்தனை வாசகர்களையும் சடுதியில் அழைத்துச் சென்றவர் அவர். கடைசி வரை அத்தனை பேரையும் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்.

பிறகு ஜெயகாந்தன், அரு. ராமநாதன்,நா.பார்த்தசாரதி,கிவா,லா.சா.ராமாமிருதம், இந்திரா பா.சாரதி, கோவி, அசோகமித்திரன், பாலமுருகன் இன்னும் விடுபட்ட பலபேர்களுடனும் அளவளாவிக் கொண்டிருக்கும்போது விடிவெள்ளி போல தென்பட்டார் தி. ஜானகிராமன்.

ஆற்றொழுக்கு போல மனதை தடவிவிடுவது போல ஒரு எழுத்து அவருடையது. அவரின் அம்மா வந்தாளில் விழுந்தவன்தான். இன்னமும் அவரின் எழுத்தாளுமையிலிருந்து நான் மீளவேயில்லை. மீளவும் விரும்பவில்லை. எத்தனை மீள் வாசிப்பு நடத்தியும் அதன் புதுமை குறைவதேயில்லை. அவரின் சிறுகதைகளுக்காக ஒரு தனிக்கட்டுரையே எழுதலாம்

புதுமைப்பித்தனின் எழுத்தாளுமைக்கும் ஒரு தனி வசீகரம் உண்டு.

விடுபட்ட எழுத்தாளுமைகள் நிறைய உண்டு.

முத்தாய்ப்பாக சு.ரா.     ஜே.ஜே. சில குறிப்புகள், ஒரு புளியமரத்தின் கதை,
மற்றும் அவரின் சிறுகதைகள்,கட்டுரைகள்--அனைத்தும் கல்வெட்டுக்கள்.

http://subramanian-thamirabharani.blogspot.com/
date 15/01/2012    01-35p.m

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

தாமிரபரணி

தாமிரபரணியை நான் மிகவும் நேசிக்கிறேன்
என் சொந்த ஊரான கல்லிடையை அரவணைத்துச்செல்லும் நதி அது.

பொதிகையில் உற்பத்தியாகி பாபநாசம், விகேபுரம்வழி, அம்பை-கல்லிடையூடாகப் பாய்ந்து, வீரவநல்லூர், சேரன்மாதேவி,நெல்லை கடந்து
கருங்குளம், ஸ்ரீ வைகுண்டம் தாண்டி கடலை அடைகிறது.

செல்லும் வழியெல்லாம் பசுமையை விதைத்து வளம் பெறச்செய்கிறது


கல்லிடை என் பாட்டனார், தகப்பனார் ஊர்.

கருங்குளம் என் தாயாரின் ஊர்.

தாமிரபரணியின் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்கள்

என் உடம்பில் ஓடுவது தாமிரபரணி ரத்தம்

நான் மட்டுமல்ல, தாமிரபரணி நதிக்கரையில் பிறந்து வளர்ந்த
அனைத்து மக்களும் அப்படித்தான்.

காவேரியை சொந்தம் கண்டாட ஒருவர், இப்போது பெரியாரை சொந்தம் கொண்டாட வேறொருவர். எனில்,

தமிழகத்திலேயே உற்பத்தியாகி தமிழ் மண்ணிலேயே ஓடி,
தமிழ் நாட்டு கடலில் கலக்கும் ஒரே நதி தாமிரபரணி என்பேன்.

இன்றும் எழுபதுகளை கடந்த முதியவர்கள் கூட அதிகாலை தாமிரபரணியில்
குளிப்பதைக்காணலாம்.

அவர்களின் ஆரோக்கியமே அதுதான். மூலிகையின் அம்சங்களுடன்
மருத்துவ குணம் கலந்து பாய்ந்து வரும்  நதி அது.

நதிக்கரை வாழ்வு அற்புதமானது. அங்கு  வாழ்பவர்கள் வரம் வாங்கி
வந்தவர்கள்.

நதியை நேசிப்பவன், நாட்டை, மக்களை நேசிப்பவன், மொழியை நேசிப்பவன்

நெல்லை வாழ் தமிழ் மக்களே உங்கள் தாமிரபரணியை யாரும் மாசு
படுத்த அனுமதிக்காதீர்கள்.

உங்கள் உடம்பில் உயிர் ஓடுவதே தாமிரபரணி தண்ணீரால்தான்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

http://subramanian-thamirabharani.blogspot.com/

01/01/2012   11.22pm






வெள்ளி, 30 டிசம்பர், 2011

கல் தெய்வங்கள்

கல் தெய்வங்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

அவை அசையாச்
சொத்துக்கள்

முட்டினாலும்
மோதினாலும்
அழுதாலும்
கனியாது

திட்டினாலும்
அடித்தாலும்
இரங்காது

சுனாமி புயல்
வந்து அழிந்தாலும்
அழியாது

குற்ற உணர்ச்சியால்
மன்னிப்பு கேட்டாலும்
கிடைக்காது

தப்பித் தவறி
நன்மை நிகழ்ந்து
கண்ணீர் மல்க
நன்றி கூறினாலும்
ஏற்காது

ஊட்டினாலும்
உண்ணாது

கொடுத்தாலும்
வாங்காது

வெறுத்தாலும்
விடாது

இருந்தும்
கல் தெய்வங்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

அவை அசையாச்
சொத்துக்கள்


சனி, 17 டிசம்பர், 2011

ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை

கூடங்குளமானாலும்
முல்லைப்பெரியாரானாலும்

2 ஜி ஆனாலும்
வரப்போகும்
3 ஜி 4 ஜி 5 ஜியானாலும்

பெத்த

ஊழலேயானாலும்
தமிழ் மக்களின்
உறவே போனாலும்

எப்போதும்
ஆட்சியாளர்களுக்கு

ஒன்றுமில்லை

http://subramanian-thamirabharani.blogspot.com/

18/12/2011   1pm

வெள்ளி, 9 டிசம்பர், 2011

இணைப்பு

இணைப்பு

ஒன்றோடுன்று இணைவது சுகம்


நாடுகள் இணைவதும் பலம்
புல்லுருவிகள்
தடையிடாவிட்டால்

இணைப்பு அறிவை வளர்க்கும்
பெருமளவில்
புரிந்து கொண்டால்

நதியிணைப்பு தாகம் தீர்க்கும்
பின்
பசியைப்போக்கும்
தலை முறைகளாய்

நாடாள்பவர் இணைந்தால்
மக்கள் நலம்

மேலும் சொல்வதற்கு
ஒன்றுமில்லை

ஒன்றோடொன்று இணைவது சுகம்


09/12/2011  6.55pm

செவ்வாய், 6 டிசம்பர், 2011

அணை - கட்டு

அணை - கட்டு

முல்லைப்பெரியார் பிரச்சனையை இந்த அளவுக்கு பெரிதாக்கியதே கேரள
அமைச்சர்களும், ஊடகங்களும் தான்.

செய்தி ஊடகங்களின் சமீபத்திய போக்கும் அப்படித்தான் இருக்கின்றன.
அரை மணி நேர செய்தி வாசிப்பில் 25 நிமிடங்கள் அணைக்கட்டைப்பற்றியே இருக்கின்றன.

முதலில் இம்மாதிரியான பயமுறுத்தல் நடவடிக்கைகளுக்கு அணை - கட்டவேண்டும். சுமுகமான தீர்வுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி யோசித்து இரு மாநில மக்களுக்கும் தேவையான
நன்மைகள் கிடைக்கும்படிச்செய்ய வேண்டும்.

அதை விடுத்து வன்முறையை கட்டவிழ்த்து விடுவது போன்ற அறிக்கைகளுக்கும், செய்தி வாசிப்புகளுக்கும் அணை - கட்டுவதுதான்
சிறந்தது என்று தோன்றுகிறது.

6/12/2011  7-11pm.

http://subramanian-thamirabharani.blogspot.com/

சனி, 26 நவம்பர், 2011

பயம்

பயம்

அத்துடன் அலட்சியம். இரு மாநிலங்களுக்கிடையேயான புரிதலில்லாத
ஒரு விஷயமாக முல்லைப்பெரியார் பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது.

சமீப காலமாக அடிக்கடி உண்டாகும் சிறு சிறு பூமி அதிர்வுகள், எப்போது
பெரிதாகுமோ என்று கவலைப்படும் கேரளம். தண்ணீர் கிடைக்காதோ
என்று ஆதங்கப்படும் தமிழகம்.

பழைய அணைக்கட்டின் பலவீனம் - அது எங்காவது பூமி அதிர்வினால்
உடைந்தால் பல லட்சம் உயிர்கள் பலியாகுமே என்ற கேரளத்தின்
கவலையில் நியாயமில்லை என்று சொல்ல முடியாது.

அதே நேரத்தில் புதிய அணைக்கட்டு நிர்மாணித்தால் தங்களுக்கு தண்ணீர்
கிடைக்காமல் போய்விடுமோ என்ற தமிழகத்தின் சந்தேகத்தையும்
குறை கூற முடியாது.

உடனடியாக மத்திய அரசு இரு மாநில முதல்வர்களையும், மற்றும்
முதன்மையான பொறியியல் வல்லுனர்களையும் அவர்களோடு
உன்னத நீதிமான்களையும் சேர்த்து போர்க்கால அடிப்படையில்
ஆலோசனை நடத்த வேண்டும்.

காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லாமல் திறந்த மனதுடன் மக்களின்
நலனுக்காக (நம் இந்திய மக்கள் ) என்ற நினைப்புடன் பேச்சு
வார்த்தை நடத்தவேண்டும்.

கண்டிப்பாக ஒரு நல்ல முடிவு கிடைக்கும். மக்களின் பயத்தையும்
சந்தேகத்தையும் போக்குவது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

என் பூமி, என் தண்ணீர், என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காமல்
நம் மக்களின் வாழ்வு என்ற  எண்ணத்துடன் செயல் பட்டால்
நிச்சயமாக ஒரு விடிவு கிடைக்கும்.

அரசியல் உள் நோக்கம் எல்லாம் தேவையேயில்லை. மக்களிடம் வித்தியாசம் பார்க்காமல் அவர்களுக்காக நல்லதைச்செய்யும்
அரசியல்வாதிகளுக்கு என்றும் தோல்வியில்லை.

முதலில் நம் இந்திய மக்கள் என்ற நினைப்பு வரவேண்டும். மாநிலப்பிரிவினைகள் நமக்குள் தேவையில்லை.

பயம், சந்தேகமில்லாத வாழ்க்கை, மக்களுக்கு இதற்கான அடித்தளம் அமைய
இரு மாநில முதல்வர்களும் முயன்றால் அது சரித்திரத்தில் ஒரு பொன்
எழுத்துக்களாக பொறிக்கப்படும்.

http://subramanian-thamirabharani.blogspot.com/

Date 27/11/2011 - 1.11pm