சனி, 21 ஜூன், 2014

புதுசு

பதுசு

எது என்று தெரிவதில்லை
எதுவும்!
ஆசையோடு நெருங்குகையில்
தோன்றுமது!

முடிந்ததும் தோன்றும் -

அது சென்ற கணத்தின்
புதுசென்று

வெந்த சோறு புதுசு

அடுத்த நாள் தண்ணி
ஊற்றிய அதே சோறு
அப்போதைய பசிக்கு
புதுசு!

ஒவ்வொரு முறை
வரும் பசியும்
புதுசு.

அடங்கிப் பின்
வருவதும்

அதே பழைய
புதுசு.........

சனி, 1 டிசம்பர், 2012

பின்னோக்கி...........

அடிக்கடி கொஞ்சம் பின்னோக்கிச் செல்வது சுகமே!
நிகழ்வுகளில் கனவு மட்டுமே இதம்.
இப்போது கிடைத்ததை விட முன்பு 
உறுத்திய முட்கள் இன்று 
மலர்களெனத் தோன்றும்!

பழைய உறவுகள் இளமைத் தோழமைகள்-
இன்றளவும் சாகா வரம் பெற்று
பின் தொடரும் - நினைவில் மட்டும்!

மானிட இலக்கியத்தில் ஒவ்வொரு
அத்தியாயமும் புலம்பல் சுவையே!

நிரப்பப் படாத தாள்கள் மெதுவாக
முதுமையின் கைப்பிடித்து -
பின்னோக்கிப் பார்த்தவாறே.............







ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

மலை

மலைப்பான விஷயங்கள் வாழ்வில் பலமுறை நடக்கும்.
மலைகளைக் காணும்போதெல்லாம் மலைத்திருக்கிறேன் பலமுறை. அதன் அழகு, கம்பீரம் அமைதி என்னை மலைக்க வைத்திருக்கின்றன.இன்னமும்.
உண்மையில் மலைகள் மனிதனின் இயற்கையான வாழ்வுக்கு பெருமளவு துணை புரிகின்றன. காற்றையும் மேகங்களையும் தடுத்து மழை பொழிவிப்பதில் பெரும்பங்காற்றுகின்றன!

 இந்த மலைகளைத்தான் இன்று உடைத்து கிரானைட் கற்களாக்கி பண மலைகளை உருவாக்குகிறார்கள் பண முதலைகள்.
இதற்கு அரசு அதிகாரிகளும் துணை போவதாகக் கேள்வி!

என்று மனிதன் பிழைப்புக்காக கிராம வாழ்வைத் தொலைத்தானோ அன்றே இயற்கை வளங்களையும் கொஞ்சங் கொஞ்சமாகத் தொலைக்கத் தலைப்பட்டு விட்டான்.அவனுக்குத் தேவை செயற்கைச் சுகங்கள். அதை அடைய அதிக பணம் தேவை. அதற்கு இயற்கையைக் கொன்றாவது அவன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்! ஆடம்பர வாழ்க்கை, துரித உணவு, குளிர்பதன சிற்றூர்தி, வெளிநாட்டு மோகம், எங்கு போவதாக இருந்தாலும்
முதுகில் ஏசியைச் சுமந்து செல்ல வேண்டும். இதற்கெல்லாம் சில பேருக்கு
எந்த வழியிலாவது பணம் ஈட்ட வேண்டும்.
உண்மையில் இப்படிப் பட்டவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு சொத்தைச் சேர்த்து வைக்கவில்லை. நஞ்சைத்தான் சேர்த்து வைக்கிறார்கள்.

இயற்கையை ஒதுக்கி வாழும் இப்படிப் பட்ட வாழ்வில் அவர்கள் வாரிசுகளை
நாளை இயற்கையே ஒதுக்கிவிடும். அதற்கு பெரும் விலை கொடுக்கும் நாள் வெகு தூரத்திலில்லை!





ஞாயிறு, 8 ஜூலை, 2012

புரிந்தபோது...

பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் - என்னை
ஆழமாகக் காதலித்ததாக ஒரு உண்மையைச் சொன்னாள் அவள்.

நான் அன்று போல் இன்றும் வெளிக்காட்டாமல்
மௌனமாகவே......

அவள் கையில் இருந்த குழந்தை என்னிடம் தாவியது.
கேட்டபோது நவின்றாள்.

--- பேரனாம்.........


புதன், 13 ஜூன், 2012

ஆங்காங்கிலம்

அந்த மொழியை இணைப்பு மொழி என்கிறார்கள்
எதை எதை இணைக்க என்றுதான் தெரியவில்லை

அந்த மொழியை இங்கே கொண்டு வந்தவர்கள் -
பிரித்தாளும் பிரித்தானியச் சூழ்ச்சியைத்தானே
விதைத்தார்கள்

கற்றுக்கொண்டவர்கள் தங்களை உயர்நிலை வேந்தனாகக் -
காட்டிக் கொண்டார்கள்
திகைத்து நின்றவனை பாமரன் என்றழைத்து -
பிரித்துப் பார்த்தார்கள்.
எதை எதை இணைத்தார்கள் என்று இன்னும்
தெரியவில்லை

பிரித்துப் பேதம் பார்க்கும் ஒரு மொழியை - இணைப்பு மொழி
என்பதன் நோக்கம் என்னவென்றே இன்னமும் -
புரியவேயில்லை!அ

சனி, 9 ஜூன், 2012

குழப்பம்

பேரமைதி எது என்று தெரியவில்லை - மிக
அதிக ஓசையின் நடுவே இருப்பதா பேரமைதி?

நாக்கைக் கிழிக்கும் சுவை எப்படியிருக்கும்
என்று தெரியவில்லை - சுவையறியா மையப்புள்ளியிலா அது?

மையிருட்டின் ஆழமும் விளங்கவில்லை - பேரொளியின்
உச்ச நிலை தாக்கமா அது?

வெறுப்பின் தீவீரமும், காதலின் முள் வேதனையும் -அன்பின்
மூர்க்கமும் எதிரெதிர் குணங்களாகத்தான் என்றுமே
வெளிப்படுகின்றன!


வெள்ளி, 8 ஜூன், 2012

மனம்

என்னவெல்லாம் சொல்கிறது இந்த மனசு
நினத்தால் பாவம் என்கிறது - நினைக்காவிட்டால்
ஏக்கம் என்கிறது

தானே எடுக்கும் முடிவுகள் என்றுமே பாரம்தான்
என்கிறது.

சரி! சொல்லித்தான் தாயேன் என்றால்-
அது என் வேலை அல்ல என்கிறது!

எனக்குரிய வேலை விமர்சனம் மட்டுமே என்றபடியே -
தூங்கச் சொன்றது அது.

நான் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டேயிருந்தேன்
என் வேலை அதுவேயென!