சனி, 28 மே, 2016

அப்படித்தான்.....

பின் தொடர்வதெல்லாம்
பின்னலாகத்தான் தோன்றும்

எதற்கும் கலங்காத உள்ளம்
என்பது நடிப்பன்றி
வேறொன்றுமில்லை

நிறைவு என்பது 
நாள் பட்டுப் போகும்போது
சோர்ந்துவிடும் ஒன்று

விரைவில் தீர்மானிக்கப்படலாம்
அரைமனதாகத்தான்
செயலாற்ற வேண்டுமென்று

தொடங்கும்போதே
தப்பித்துக் கொள்ளும்
எண்ணமே மேலோங்கும்
எதிலும்!

வெள்ளி, 27 மே, 2016

அது அவ்வாறு

அவ்வாறு இருப்பது மட்டுமே
அவ்வாறான காரணங்களைத்
தோற்றுவிக்கிறது

பாதைகள் முடிவில்லாமல்
சென்றாலும் பயணங்கள்
என்றாவது முடிந்துதான்
தீரவேண்டும்

விரக்தி எதிலும்
ஒட்டுவதில்லை

தெரிந்து ஒன்றும்
செய்யப்போவதில்லை
தெரிவது மட்டுமே

தீர்வுமில்லை

அப்படியே நகரட்டும்
வாழ்க்கையின்
நிகழ்வுகள்

மாற்றங்கள் தானே
மாறிக் கொள்ளும்

அவ்வாறான காரணமும்
அவ்வாறே!

வியாழன், 26 மே, 2016

ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை -

எதுவும் நடந்து
முடிந்தபின்

அன்றன்றைக்கு
நடப்பதும்

பின்
ஒன்றுமில்லை

என்றுமில்லை -
எப்போவாவதுதான்
என்பதன் உத்தேசமும்

ஏனோ
ஒன்றுமில்லை

சரி! வேறொன்று
மில்லையே என்றாலும்

எனக்கொன்றுமில்லை!



வெற்றிடம்

வெற்றிடம்


வேறு வேறு இடமும்
வெற்றிடமே

இடம் மாறினால் மனதில்
முதலில் வருவது
வெற்றிடமே

வேறிடம் பார்த்துச்
செல்வதும் வெற்றிடம்
தேடியே

அமைதி வேண்டுமெனில்
உள்ளத்தில் வரவேண்டியதும்

அதே வெற்றிடமே!

சனி, 25 ஜூலை, 2015

எளிமை

மகத்தான
ஆனால்
யாராலும்

இப்போது
செயல்படுத்த
முடியாத
ஒன்று!

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ஏலே!

லே! நான் தின்னேலி லே!

திருநெல்வேலின்னா  லே ஒரு மெதப்புதாம்   லே!



அந்த லே க்கு அப்படி ஒரு இணைப்பு பாசம்! சென்ற வாரம் நெல்லைக்குச் சென்று வந்த பிறகும் மனசு அங்ஙனயேதான் சுத்திக்கிட்டிருக்கு. தாமிரபரணியில் நல்ல குளியல். கல்லிடையில் தாமிரபரணிக் குளியலுக்கு அப்படி ஒரு சுகம். வயது 70 ஐத் தாண்டியவர்களும்
தினமும் ஆற்றில் குளித்து ஆரோக்கியத்தைப் பேணுகிறார்கள்! வற்றாத ஜீவ நதி! நெல்லை மக்களின் தாய் தாமிரபரணி!

இருட்டுக் கடை அல்வாவின் தனிச்சுவைக்கே தாமிரபரணிதான் காரணம்! அந்த நதி ஓடும் பாதையெல்லாம் செழிப்புக்குப் பஞ்சமில்லை! புராணம் ராமாயண மகாபாரத காலத்திலும் தாமிரபரணியின் புகழ் ஓங்கியிருந்தது.

அதன் கரைகளில்தான் எத்தனை புகழ் வாய்ந்த புராதன கோயில்கள்! சைவமும் வைணவமும் தழைத்து வளர்ந்த நதிக்கரை! 

அரசியல் மற்றும் பணமுதலைகளிடமிருந்து அந்த நதியைக் காப்பாற்றுவது நெல்லை மக்களின் தலையாய கடமை! தாமிரபரணியை மறந்தால் நம் வாழ்வை மட்டுமல்ல எதிர்கால சந்ததியையே நாம் மறக்கிறோம்!

தாமிரபரணியை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்!


லே! தாமிரபரணி லே!

ஞாயிறு, 6 ஜூலை, 2014

பாதை

யாரோ யோசித்து
யார் யாரோ போட்ட
பாதை!

போவதும் வருவதும்
யாராரோ

யாரும் யாரையும்
நினைவில்
கொள்வதில்லை -
லாபமிருந்தாலொழிய!

இருந்தும் ஏதோ ஒரு
பாதை தேவைப்படுகிறது

வாழ்க்கைப் பாதையை
நடத்த..........