ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ஏலே!

லே! நான் தின்னேலி லே!

திருநெல்வேலின்னா  லே ஒரு மெதப்புதாம்   லே!



அந்த லே க்கு அப்படி ஒரு இணைப்பு பாசம்! சென்ற வாரம் நெல்லைக்குச் சென்று வந்த பிறகும் மனசு அங்ஙனயேதான் சுத்திக்கிட்டிருக்கு. தாமிரபரணியில் நல்ல குளியல். கல்லிடையில் தாமிரபரணிக் குளியலுக்கு அப்படி ஒரு சுகம். வயது 70 ஐத் தாண்டியவர்களும்
தினமும் ஆற்றில் குளித்து ஆரோக்கியத்தைப் பேணுகிறார்கள்! வற்றாத ஜீவ நதி! நெல்லை மக்களின் தாய் தாமிரபரணி!

இருட்டுக் கடை அல்வாவின் தனிச்சுவைக்கே தாமிரபரணிதான் காரணம்! அந்த நதி ஓடும் பாதையெல்லாம் செழிப்புக்குப் பஞ்சமில்லை! புராணம் ராமாயண மகாபாரத காலத்திலும் தாமிரபரணியின் புகழ் ஓங்கியிருந்தது.

அதன் கரைகளில்தான் எத்தனை புகழ் வாய்ந்த புராதன கோயில்கள்! சைவமும் வைணவமும் தழைத்து வளர்ந்த நதிக்கரை! 

அரசியல் மற்றும் பணமுதலைகளிடமிருந்து அந்த நதியைக் காப்பாற்றுவது நெல்லை மக்களின் தலையாய கடமை! தாமிரபரணியை மறந்தால் நம் வாழ்வை மட்டுமல்ல எதிர்கால சந்ததியையே நாம் மறக்கிறோம்!

தாமிரபரணியை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்!


லே! தாமிரபரணி லே!

ஞாயிறு, 6 ஜூலை, 2014

பாதை

யாரோ யோசித்து
யார் யாரோ போட்ட
பாதை!

போவதும் வருவதும்
யாராரோ

யாரும் யாரையும்
நினைவில்
கொள்வதில்லை -
லாபமிருந்தாலொழிய!

இருந்தும் ஏதோ ஒரு
பாதை தேவைப்படுகிறது

வாழ்க்கைப் பாதையை
நடத்த..........

சனி, 28 ஜூன், 2014

தென்றல்

நினைவுகளிலும்
செயல்களிலும்
இதன் தாக்கம்
இருப்பின் -

விளைவுகளும்
அப்படியே
இருக்கும்!

நமக்குத் தேவை
எப்போதும்
இதன் வருடலே!

யோசித்துப்
பாருங்கள்

அப்போது
புரியும்

இதன்
நிரந்தர

சுகம்!

ஞாயிறு, 22 ஜூன், 2014

அது அப்படித்தாங்க......

அது அப்படித்தாங்க.......

இந்த முறை பருவ மழை பொய்க்குமோ என்ற கவலை. பொய்த்தால் அதன்
காரணங்களைக் கூறியே விலைவாசி ஏற்றப்படும்! (இப்ப மட்டும் என்ன வாழுது?) இப்பொழுது கேரளாவில் தினமும் இரவில் 75 நிமிடங்களுக்கு மின் வெட்டு அமல் படுத்தப் பட்டிருக்கிறது. மழை இல்லாவிட்டால் இதன் நேரம் இன்னமும் அதிகமாக்கப்படும் என்று தகவல்.

வள்ளுவன் சொன்னது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும்!

வான் பொய்த்தால் வாழ்வு பொய்த்துவிடும்!

பொய்க்காமல் பெய்யட்டும் மழை!
----------------------------------------------------------------------

அரசாங்கத்துக்கு உலக வங்கி என்பது என்றும்
தம் மக்களே............
----------------------------------------------------------------------

பெரும்பான்மை இருந்தால் எதையும்
தைரியமாகச் செய்யலாம்!
-----------------------------------------------------------------------


சனி, 21 ஜூன், 2014

புதுசு

பதுசு

எது என்று தெரிவதில்லை
எதுவும்!
ஆசையோடு நெருங்குகையில்
தோன்றுமது!

முடிந்ததும் தோன்றும் -

அது சென்ற கணத்தின்
புதுசென்று

வெந்த சோறு புதுசு

அடுத்த நாள் தண்ணி
ஊற்றிய அதே சோறு
அப்போதைய பசிக்கு
புதுசு!

ஒவ்வொரு முறை
வரும் பசியும்
புதுசு.

அடங்கிப் பின்
வருவதும்

அதே பழைய
புதுசு.........

சனி, 1 டிசம்பர், 2012

பின்னோக்கி...........

அடிக்கடி கொஞ்சம் பின்னோக்கிச் செல்வது சுகமே!
நிகழ்வுகளில் கனவு மட்டுமே இதம்.
இப்போது கிடைத்ததை விட முன்பு 
உறுத்திய முட்கள் இன்று 
மலர்களெனத் தோன்றும்!

பழைய உறவுகள் இளமைத் தோழமைகள்-
இன்றளவும் சாகா வரம் பெற்று
பின் தொடரும் - நினைவில் மட்டும்!

மானிட இலக்கியத்தில் ஒவ்வொரு
அத்தியாயமும் புலம்பல் சுவையே!

நிரப்பப் படாத தாள்கள் மெதுவாக
முதுமையின் கைப்பிடித்து -
பின்னோக்கிப் பார்த்தவாறே.............







ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

மலை

மலைப்பான விஷயங்கள் வாழ்வில் பலமுறை நடக்கும்.
மலைகளைக் காணும்போதெல்லாம் மலைத்திருக்கிறேன் பலமுறை. அதன் அழகு, கம்பீரம் அமைதி என்னை மலைக்க வைத்திருக்கின்றன.இன்னமும்.
உண்மையில் மலைகள் மனிதனின் இயற்கையான வாழ்வுக்கு பெருமளவு துணை புரிகின்றன. காற்றையும் மேகங்களையும் தடுத்து மழை பொழிவிப்பதில் பெரும்பங்காற்றுகின்றன!

 இந்த மலைகளைத்தான் இன்று உடைத்து கிரானைட் கற்களாக்கி பண மலைகளை உருவாக்குகிறார்கள் பண முதலைகள்.
இதற்கு அரசு அதிகாரிகளும் துணை போவதாகக் கேள்வி!

என்று மனிதன் பிழைப்புக்காக கிராம வாழ்வைத் தொலைத்தானோ அன்றே இயற்கை வளங்களையும் கொஞ்சங் கொஞ்சமாகத் தொலைக்கத் தலைப்பட்டு விட்டான்.அவனுக்குத் தேவை செயற்கைச் சுகங்கள். அதை அடைய அதிக பணம் தேவை. அதற்கு இயற்கையைக் கொன்றாவது அவன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்! ஆடம்பர வாழ்க்கை, துரித உணவு, குளிர்பதன சிற்றூர்தி, வெளிநாட்டு மோகம், எங்கு போவதாக இருந்தாலும்
முதுகில் ஏசியைச் சுமந்து செல்ல வேண்டும். இதற்கெல்லாம் சில பேருக்கு
எந்த வழியிலாவது பணம் ஈட்ட வேண்டும்.
உண்மையில் இப்படிப் பட்டவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு சொத்தைச் சேர்த்து வைக்கவில்லை. நஞ்சைத்தான் சேர்த்து வைக்கிறார்கள்.

இயற்கையை ஒதுக்கி வாழும் இப்படிப் பட்ட வாழ்வில் அவர்கள் வாரிசுகளை
நாளை இயற்கையே ஒதுக்கிவிடும். அதற்கு பெரும் விலை கொடுக்கும் நாள் வெகு தூரத்திலில்லை!