சனி, 5 நவம்பர், 2011

வானுயர 3

மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு. பயந்தது போலவே காரியங்கள் நடந்து
கொண்டிருக்கின்றன. நிதியமைச்சர் 'இதில் சர்க்கார் ஒன்றும் செய்ய இயலாது. நஷ்டத்தைக்குறைக்க எண்ணெய் கம்பனிகள் எடுக்கும் முடிவு'
என்கிறார். பிரதமரோ பிரான்சில் இருந்துகொண்டே 'இது தவிர்க்கமுடியாதது. டீசல்,  சமையல்எரிவாயு போன்றவைகளின் விலை
கட்டுப்பாட்டையும் சர்க்கார் கைவிட யோசிப்பதாகவும். மக்கள் இதை புரிந்து 
கொள்ளவேண்டும் என்றும் பிரதமர் முன் ஜாமீன் எடுத்திருக்கிறார்.

மேல் மட்டத்திலேயே புழங்கும் அமைச்சர்கள், பிரதமர் பார்வையில் நாடு 
சுபிட்சமாகத்தான் இருக்கிறது. குடியிருக்கும் வீடு ஏசி , பறக்கும் விமானம் ஏசி,
பயணிக்கும் கார் ஏசி, கிட்டும் சம்பளம் அப்படியே வங்கிக்கணக்கில், செலவுகள் 
மொத்தம் மக்களின் வரிப்பணத்தில். ஏன் பேசமாட்டார்கள் ?

நாட்டில் முக்கால் விழுக்காடு மக்கள் விலையேற்றத்தால் விழி பிதுங்கி 
வழியறியாது நிற்க வரிப்பணத்தில் சுக ஜீவிதம்  நடத்தும் மந்திரிகள், விலையேற்றத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டுமாம்-சொல்கிறார்கள்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்திய பெரும் முதலைகளின் கருப்புப்பணத்தை
வெளிக்கொணர்ந்தாலே போதும். பெரும்பாலான பிரச்சனைகளுக்கு
தீர்வு காணலாம். ஆனால் செய்ய மாட்டார்கள். காரணம் பண முதலைகளின் உதவி  காங்கிரஸ் அரசுக்குத்தேவை.

நமது பிரதமர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. அவ்வப்போது
வெளிநாடு செல்வது. போய் வந்த விஷயங்களை பள்ளி சென்றுவந்த
குழந்தைகள் அன்று என்ன நடந்தது என்று அம்மாவிடம் சொல்லுமே,
அதே போல் சோனியாஜி இடம் சொல்வது, கிரிக்கெட்டில் அம்பயர்,
நாலு ரன் எடுத்தால் இடமும் வலமும் காட்டுவது போல் கையை ஆட்டுவது , சோனியாஜியின் முகம் கோணாமல் நடப்பது 
இவையெல்லாம் தான் இவர் வேலை.

மற்றபடி மக்களை பிழியும் விலைவாசி ஏற்றம் எல்லாம் பிரதமருக்கு ஒரு 
பொருட்டே அல்ல.

பழகச்சொல்கிறார். மிகச்சிறந்த பொருளாதார மேதை, மக்கள் விலையேற்றத்தை புரிந்து சகித்து கொள்ளச்சொல்கிறார்.

சகித்துக்கொள்ளத்தானே மக்கள்.

சுகித்து வாழத்தானே மந்திரிகள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக