சனி, 15 அக்டோபர், 2011

Sneha Veedu

சிநேக வீடு

மோகன்லாலின் சமீபத்திய மலையாளப்படம்.
சத்யன் அந்திக்காடின் இயக்கம்.

ஒரு சிறு கதை போன்ற இந்தப்படத்தின் கதையை ஒருசில வரிகளில்
அடக்கி விடலாம்.

பாலக்காடு கிராமத்தில் விவசாயம் செய்து அம்மாவுடன் நிம்மதியாக
வாழும் முதிர் காளையாக ஊரை வலம் வரும் மோகன்லால்.

விவசாயப்பணிகள் முடிந்து நண்பர்களுடன்  தன் பழைய சென்னை
வாழ்க்கையில் பல பெண்கள் தன்னையே சுற்றி வந்த கதைகளை ' பீலா' 
விட்டுக்கொண்டும், அவர்களுக்கு மத்தியில் ஹீரோவாக தன்னை முன் 
நிறுத்தி பல கலை நிகழ்சிகளை நடத்தியும் நேரம் போக்கும் லால் இரவில் 
நேரம் கழித்துதான் வீடு திரும்புவார் .

அப்படி ஒரு முறை வீட்டிற்கு வரும்போது வீடு இருளடைந்து கிடக்கிறது.
வாசலில் ஒரு 15 வயது பையன் உட்கார்ந்திருக்கிறான் . ஒன்றும் புரியாமல் 
உள்ளே செல்லும்  மோகன்லால்  அம்மா கோபமாக உட்கார்ந்திருப்பதைக்கண்டு காரணம் கேட்க, வாசலில் உட்கார்ந்திருக்கும்
பையன் தன்னை அப்பா என்று குறிப்பிட்டான் என்பதைக்கேட்டு அதிர்ச்சி
அடைகிறார்.
கல்யாணம் ஆகாத தனக்கு எப்படி மகன் என்று குழம்ப, லாலின் 'பீலா'
கதைகளை கேட்டுப்பழகிய ஊரார் சந்தேகிக்கின்றனர் .

அம்மாவும் தன்னை சந்தேகிப்பதைக்கண்டு , வெகுண்ட மோகன்லால் அந்த 
பையனை ஊரை விட்டு அனுப்ப பல முயற்சிகளும் செய்கிறார் .
ஆனால் அம்மாவுக்கு அது பிடிக்காமல் அவனை பேரனாக ஏற்றுக்கொள்கிறார் .
தன் மீது இருக்கும் களங்கத்தை போக்க சென்னைக்கு , அந்தப்பையனின் 
வேர்களைத்தேடிச்
செல்கிறார் மோகன்லால்.

சென்னையில் பழைய நண்பரைக்கண்டு பிடித்து விஷயத்திச்சொல்ல,
நண்பரோ, தான்தான் பையனிடம் மோகன்லாலின் பழைய போட்டோவைக்கொடுத்து , இவர்தான் உன் அப்பா என்று சொல்லி அனுப்பியதாகவும் சொல்கிறார்.

இனி flash back


படப்பிடிப்புக்காக துணை நடிகைகளை சப்ளை செய்யும் நண்பர் தவறான
உறவால் தாய்மை அடையும் ஒரு துணை நடிகைக்கு அடைக்கலம்
கொடுக்கிறார். அவரின்  உதவியோடு மகனை பள்ளி இறுதி வரை
படிக்க வைக்கிறாள் துணை நடிகை. ஒரு முறை படப்பிடிப்பில்
விபத்துக்கு ஆளாகி நடிகை இறக்க, இதைக்கேள்விப்படும் பையன்
மனமுடைந்து தற்கொலைக்கு முயல்கிறான்

அதை தடுக்கும் நண்பர் ' நீ அநாதை இல்லை. உனக்கொரு அப்பா இருக்கிறார். நீ அவரிடம் போ. என்று சொல்லி மோகன்லாலின் போட்டோவையும்  விலாசத்தையும் கொடுத்து விடுகிறார்

திகைக்கும் மோகன்லால் 'என் போட்டோவை கொடுத்து அவனை அனுப்பி
ஏன் என் நிம்மதியை கெடுத்தீர்கள் என்று கேட்க ' அவன் சின்னப்பையன்
தற்கொலை செய்யத்துணிந்த அவனுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்க
இதைத்தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை என்கிறார் நண்பர் .

சரி ஊருக்கு வந்து என் அம்மாவிடம் உண்மையை கூறுங்கள் என்று
அவரை அம்மாவிடம் அழைத்து வருகிறார் லால் .

இங்கு வந்தால் பையனைக்காணவில்லை. அம்மாவிடம் கேட்டபோது '
உனக்கு அவனை பிடிக்கவில்லை என்று மனம் நொந்து கிளம்பி  விட்டான்
என்கிறாள்.

நண்பருடன் ஸ்டேஷனுக்கு வந்து பார்க்கும் லால் பையன் தனியாக 
உட்கார்ந்திருப்பதைக்கண்டு சட்டென்று தோன்றும் ஒரு உணர்ச்சிப்பெருக்கோடு 
பையனை கட்டி அணைத்து 'நீ நீ என் மகன்தான்' என்று விதும்பலோடு
கூறுகிறார். இருவர் கண்களும் கலங்குகின்றன.

சாதாரண  கதை. தெளிவான இயக்கம்.

இசை இளையராஜா. பாடல்கள் எல்லாமே முத்து.

சிம்பிளான நிறைவான படம்.









  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக